செவ்வாய், 31 டிசம்பர், 2013

உணவை ஜீரணம் செய்வது எப்படி? 2

நன்றி அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
4.உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்து உண்ண வேண்டும்.
நாம் சாப்பிடும் பொழுது உணவைப் பற்களால் நன்கு அரைத்துச் சாப்பிட வேண்டும். உணவைப் பற்களால் அரைக்காமல், நொறுக்காமல் யார் யாரெல்லாம் குண்டு குண்டாக அப்படியே விழுங்குகிறார்களோ, அவர்களுடைய வயிறு அவர்களை ஒரு கேள்வி கேட்கும். “அரைப்பதற்கு என்னிடம் பல்லா இருக்கிறது? அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன? அல்லது வயிற்றில் கிரைண்டர் போல் கல் இருக்கிறதா?” என்று வயிறு நம்மைப் பார்த்துக் கேட்கும். வயிற்றில் பற்களும் இல்லை, பிளேடுகளும் இல்லை, கல்லும் இல்லை. பிறகு நாம் சாப்பிடும் உணவை வயிறு எப்படி ஜீரணம் செய்கிறது என்றால், வயிறு என்பது ஒரு குடம் போல. வயிற்றில் Hydrocloric Acid (HCL) என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணம் செய்கிறது. இந்த அமிலத்தின் சக்தி என்னவென்றால், நம் வயிற்றில் பசிக்கும் பொழுது சுரக்கும் பிசிலி அமிலத்தை எடுத்து ஓர் இரும்பின் மேல் ஊற்றினால் இரும்பே உருகும். நம் உள்ளங்கையில் ஊற்றினால் உள்ளங்கையில் ஓட்டை விழுந்து விடும். இப்படி இரும்பையே உருக்கும் சக்தி வாய்ந்த அமிலம் தான் ஒவ்வொரு முறை பசிக்கும் பொழுதும் நம் இரைப்பையில் உற்பத்தியாகிறது.
இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையை ஒன்றும் செய்யாதா என்று சந்தேகம் வரும். இரைப்பையிலிருக்கும் இந்த அமிலத்திற்கு இடையே முயூக்கஸ் என்ற ஒரு சளிப்படலம் இருக்கும். இந்தச் சளிப்படலம் தான் அமிலத்தை இரைப்பையுடன் சேராமல் இரைப்பைக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கிறது. பசி எடுத்த பிறகு நீண்ட நேரமாகச் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் சுரந்த அமிலம், தான் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் இந்த முயூக்கஸ் சளிப்படலத்தைச் சாப்பிட ஆரம்பிக்கும். இப்படிப் பசி எடுத்து சாப்பிடாமல் வயிற்றைக் காயப் போடும் நபர்களுக்குச் சிறிது காலத்துக்குப் பிறகு இந்த அமிலம் சளிப் படலத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் இரைப்பையைத் தொடும். இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையைத் தொட்டவுடன் இரைப்பை பாதித்துப் புண் ஏற்படும். அப்பொழுது அதி பயங்கரமாக வயிற்று வலி ஏற்படும். இதையே அல்சர் என்று கூறுவார்கள்.
அல்சர் வராமல் இருப்பதற்கு நேரம் நேரம் ஒழுங்காக நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று உலக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யார்யாரெல்லாம் நேரம் நேரம் பார்த்து ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு தான் அல்சர் வரும். நேரம் பார்த்துச் சாப்பிட்டால் அல்சர் வரும். பசி எடுத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். நேரம் பார்த்துச் சாப்பிடுவதற்கும் பசி எடுத்துச் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாக காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு சாப்பிடுகிறார். அவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். பகல் 2மணி ஆனவுடன் அவர் சரியான நேரம் பார்த்துப் பசி இல்லாத போது சாப்பிட்டால் என்ன ஆகும்? ஏற்கெனவே ஜீரணமாகாத உணவு வயிற்றில் இருக்கும் பொழுது அதுவும் கெட்டுப் போகும். புதிதாக சாப்பிடப் போகும் புதிய உணவும் கெட்டுப் போகும். இதே போல் காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு எடுத்துக் கொள்கிறார். அதிக வேலை செய்கிறார். பகல் பன்னிரண்டு மணிக்கு நன்றாகப் பசிக்கிறது. இவர் நான் நேரம் பார்த்துதான் சாப்பிடுவேன் என்று இரண்டு மணி வரை தாமதமாகக் காத்திருந்தால் இந்த இரண்டு மணி நேரத்தில் அமிலம் இரைப்பையைப் புண்ணாக்க வாய்ப்பு உள்ளது. எனவே நேரம் பார்த்துச் சாப்பிடுவது நோய். பசி எடுத்துச் சாப்பிடுவது ஆரோக்கியம்.
உலக மருத்துவர்கள் நேரம் பார்த்துத் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். தயவு செய்து நேரம் பார்த்து யாரும் சாப்பிடாதீர்கள். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள்.
எனவே சாப்பிடும் பொழுது பற்களால் நன்றாக அரைத்து மென்று பிறகு விழுங்க வேண்டும்.
நாம் பொதுவாகப் பற்களுக்கு வேலை கொடுப்பதே கிடையாது. குண்டு குண்டாக விழுங்கி விடுகிறோம். நாம் மொத்தம் 40 முறை கையால் எடுத்துச் சாப்பிடுவோம் என்று வைத்துக் கொள்வோம். முதல் நான்கு முறை சாப்பிட்ட உணவு பற்களுக்கு வேலை கொடுக்காமல் குண்டு குண்டாக வயிற்றில் சென்றடைவதால் வயிற்றில் நாற்பது கைக்கு வேண்டிய சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக வைத்துள்ள அமிலம் முதல் நான்கு வாய் உணவிற்கே தீர்ந்து விடுகிறது. ஏனென்றால் பற்கள் செய்ய வேண்டிய வேலையை அமிலம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நாம் முதலில் சாப்பிடும் நான்கு வாய் உணவு மட்டுமே நல்ல ரத்தமாக மாறுகிறது. அதன் பிறகு சாப்பிடும் 36வாய் சாப்பாடு வயிற்றில் அமிலம் இல்லாததால் கழிவுப் பொருளாகவும், மலமாகவும் மாறுகிறது. மேலும் தொப்பை வருவதற்கும் உடல் பருமன் அடைவதற்கும் ஒரே ஒரு காரணம் பற்களுக்கு வேலை கொடுக்காதது மட்டும்தான்.
வயிற்றில் அமிலம் இருக்கும் பொழுது சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது. தொப்பையாக மாறுவது கிடையாது. வயிற்றில் அமிலம் தீர்ந்த பிறகு சாப்பிடும் உணவு ஜீரணமும் ஆவதில்லை. தொப்பையாகவும் மாறுகிறது. உடல் பருமனுக்கும் இதுவே காரணம். எனவே, பற்களுக்குத் தயவு செய்து வேலை கொடுங்கள். ஓர் உணவைப் பற்கள் எவ்வளவு நேரம் மென்று கூழ் போல அரைத்த பிறகு வயிற்றுக்குள் அனுப்புகிறதோ அந்த அளவுக்கு வயிற்றிலுள்ள அமிலத்துக்கு வேலை குறைவாகும். குறைந்த அமிலத்தின் மூலமாக உங்கள் உணவை ஜீரணம் செய்துவிட்டு மீதமுள்ள அமிலங்கள் அடுத்து வரும் உணவுகளுக்குத் தயாராக இருக்கும். எனவே நாம் சாப்பிடுகிற குழம்பு, ரசம், மோர், பாயசம், பீடா ஆகிய அனைத்து உணவும் ஜீரணமாக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று கூழ் போல் அரைத்துப் பின்னர் விழுங்க வேண்டும்.
நம்மில் பலர் தொப்பை மற்றும் உடல் பருமனுக்காக நடைப்பயிற்சி (Walking) செல்வது வழக்கம். 4கி.மீ. வாக்கிங் சென்று வந்து பின்னர் நான்கு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் எப்படி உடல் இளைக்கும்? சிலர் புதிய டெக்னாலஜி மூலமாக (வைபரேட்டர்) Viberator Machine வயிற்றில் மாட்டிக் கொண்டும் Viberator மிஷினில் ஏறி நின்று கொண்டும் எலக்ட்ரானிக் முறையின் மூலமாக அதிர்வுகள் மூலமாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். பசி இல்லாமல் எதற்காகக் கண்டதைச் சாப்பிட வேண்டும்? பின்னர் ஏன் வைபரேட்டரில் ஆட வேண்டும்? பசி எடுத்துச் சாப்பிட்டால் தொப்பையும் இருக்காது. உடல் பருமனும் இருக்காது. பிறகு ஏன் நமக்கு இந்த வீர விளையாட்டுகள். எனவே நம் சிகிச்சையில் உடல் பருமனைக் குறைப்பதற்கும் தொப்பையைக் குறைப்பதற்கும் சுலபமான வழி பற்களுக்கு வேலை கொடுப்பதுதான்.
உங்கள் எடையை இன்று பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் கூறிய முறைப்படி உணவைச் சாப்பிடுங்கள். கண்டிப்பாக ஒரு மாதத்தில் உங்கள் எடை பல கிலோ குறையும். நீங்கள் வாக்கிங் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வைபரேட்டர் மெசின் பயன்படுத்தத் தேவையில்லை. ஏற்கெனவே ஒரு வேளைக்கு ஐந்து சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருந்தால் இப்பொழுது ஏழு சப்பாத்தி சாப்பிட்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம். அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதும் தவறான கருத்து. பற்களுக்கு அதிக வேலை கொடுப்பதன் மூலமாக அதிகமாகச் சாப்பிட்டும் எடையைக் குறைக்கலாம்.
நம் சிகிச்சையில் உங்கள் மனத்துக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் பற்களுக்கு நன்றாக வேலை கொடுத்துக் கூழ் போல அரைத்து உண்ணுவதன் மூலமாக மனத்திற்குப் பிடித்தமான அனைத்து உணவுகளையும் தாராளமாகச் சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும்.
நம் சிகிச்சையில் முதலில் தொப்பை குறையும். உடல் எடை குறையும். பிறகு தான் நோய்கள் குணமாகும். எனவே நம் சிகிச்சையைப் பயன்படுத்தும் பொழுது உடல் எடை குறைவு ஏற்பட்டால் தயவு செய்து பயப்படாதீர்கள். உங்கள் எடை எவ்வளவு குறைகிறதோ அந்த அளவிற்கு உங்கள் உடம்பில் கழிவு இருந்தது என்று பொருள். நம் சிகிச்சையைச் செய்யும்பொழுது யாருடைய உடல் எடை குறையவே இல்லையோ நீங்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் எடை சிறிது சிறிதாகக் குறையும். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சில மாதங்களுக்கு ஒரே எடை இருக்கும். அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் உண்மையான ஆரோக்கியமான உடலின் எடை. பிறகு மீண்டும் உங்களின் எடை கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வரும். இப்பொழுது அதிகமாகும் இந்த எடை ஆரோக்கியமான எலும்புகளும், நரம்புகளும், தசையினால் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான உடம்பு. இப்படி அதிகமாகும் உடல் எடை இனி குறையாது.
எனவே தயவு செய்து ஒரு கையில் உணவை எடுத்து வாயில் வைத்தால் குறைந்தது பத்து அல்லது பதினைந்து முறை நன்றாக மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து விழுங்குவதன் மூலமாக வயிற்றுக்கு உதவி செய்யுங்கள். பற்களில் மெல்வது மூலமாக வயிற்றின் வேலையைக் குறைத்து விட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். வயிறு சந்தோஷமாக இருந்தால்தான் நோய்கள் குணமாகும். நாம் ஆரோக்கியமாக இருப்போம்.
5.வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி
சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுநடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது அரைமணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும்.
சிலர் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை அருந்திவிட்டுச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணிக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். வயிற்றில் உணவை ஜீரணம் செய்வதற்காக சுரந்துள்ள அமிலத்தைத் தண்ணீர் குடித்தால் அது நீர்த்து விடும் (டைலூட்). வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்த பிறகு நாம் என்னதான் நல்ல உணவை நல்ல முறையில் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகாது. எனவே தண்ணீர் குடித்தவுடன் யாராவது உங்களைச் சாப்பிட அழைத்தால் “நான் இப்பொழுது வர மாட்டேன். இப்பொழுதுதான் தண்ணீர் குடித்து அமிலத்தை அணைத்துள்ளேன். எனவே அரை மணி நேரம் கழித்துச் சாப்பிட வருகிறேன்” என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட உட்காரும் பொழுதும் கடந்த அரை மணி நேரத்தில் தண்ணீர் குடித்தோமா என்று யோசிக்க வேண்டும். எனவே, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நாம் சாப்பிடுகிற உணவு பிரமாதமாக ஜீரணமாகும்.
சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தாலும் ஜீரணம் கெட்டுவிடும். சாப்பிடும் பொழுது நன்றாக உணவைப் பற்களால் மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நடுவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.
சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. நம்மில் பலபேர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்ற விகிதத்தில் தண்ணீர் குடிக்கிறோம். இதுவும் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே சாப்பிட்டு முடித்தவுடன் அரை மணி நேரம் காத்திருந்து பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம், சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஆகும். சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒன்றரை மணி நேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒன்றரை மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருப்பது? இந்த நேரத்தில் விக்கல், சிக்கல், தாகம், தொண்டை வறண்டு போதல், நாக்கு வறண்டு போதல், உணவு காரமாக இருத்தல் போன்ற சிக்கல்கள் வரும்பொழுது எப்படித் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என்று சிலர் மனத்தில் சந்தேகம் எழலாம்.
உணவு காரமாக இருந்தால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் நாக்கு உணவு காரமாக இருக்கிறது என்று நம்மிடம் பேசுகிறது. நம் நாக்கு தண்ணீர் குடியுங்கள் என்றா கூறியது? உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைப்பதற்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. எனவே, உணவு காரமாக இருக்கும் பொழுது தேவைப்பட்டால், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை ஊற்றி காரத்தைக் குறைக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. ஜீரணம் நடக்கும் பொழுது எண்ணெய் சென்றால் கூட ஒழுங்காக ஜீரணம் ஆகும். ஆனால், தண்ணீர் சென்றால் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைக்க மாற்று வழி யோசியுங்கள். தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் வந்தால் என்ன செய்வது? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்துச் சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நம் மூளைக்கும், அதாவது மனத்திற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது.
சாப்பிடும் பொழுது உணவைப் பற்றிய எண்ணம் மட்டுமே மனத்தில் இருந்தால் இந்த நரம்பு ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்காக வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும். திடீரென நம் மனம் குடும்பம், வியாபாரம் அல்லது வேறு நபரைப் பற்றி சிந்திக்கும் பொழுது இந்த நரம்பிற்குக் குழப்பம் ஏற்படும். வயிற்றில் ஜீரணம் சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா? அல்லது இவர் மனம் யோசிக்கும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா என்று குழப்பம் ஏற்படும் பொழுது வருவதுதான் விக்கல் சிக்கல். விக்கல் சிக்கல் வரும் பொழுது நாம் பொதுவாகக் கூறுவதுண்டு, யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று. கண்டிப்பாக யாரும் உங்களை நினைக்கவில்லை. நீங்கள் யாரையாவது நினைத்தால் மட்டுமே விக்கல், சிக்கல் வரும். எனவே, சாப்பிடும் பொழுது நம் கவனம் உணவில் இருக்கும் வரை யாருக்கும் விக்கல் சிக்கல் வராது.
தொண்டை தாகமாக இருந்தால்நாக்கு வறண்டு போனால் என்ன செய்வது? இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஒரு வேளை தாகமோ, தொண்டை வறட்சியோ அல்லது விக்கல் சிக்கல் வந்தாலோ, தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதற்கு ஓர் அளவு உண்டு. நாம் குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று சேராத அளவுக்கு குறைவாக குடிக்க வேண்டும். தொண்டை தாகமாக இருக்கிறது என்றால் தொண்டைக்கு அளவாகவும், நாக்கு வறண்டு போயிருந்தால் நாக்குக்கு அளவாகவும் குடிக்க வேண்டும். அதாவது உதடு, வாய், நாக்கு, உணவுக் குழாய் முதல் நெஞ்சுக் குழி வரை தண்ணீர் செல்லும் அளவிற்குக் குடிக்கலாம். நெஞ்சுக் குழிக்குக் கீழே வயிறு உள்ளது. குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று விழக்கூடாது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி, வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்குத் தண்ணீர் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் சேராத அளவிற்கு ஒரு கால் டம்ளர் தண்ணீரால் லேசாக வாயை நனைத்துக் கொள்ளலாம். உணவு சாப்பிடும் பொழுது நடுவே ஒரு வேளை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இருந்தால் மட்டுமே மீண்டும் கால் டம்ளர் வயிற்றில் நீர் சென்று விழாத அளவிற்குக் குடித்துக் கொள்ளலாம். இதே போல் சாப்பிட்டு முடித்தவுடனே நம்மில் பலர் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்று நீர் அருந்துகிறோம். தயவு செய்து அப்படிக் குடிக்காதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் கால் டம்ளர் முதல் அரை டம்ளர் வரை குறைவாக வாயைக் கொப்பளித்து விழுங்கும் அளவிற்கு தண்ணீர் குடித்தால் போதும். பிறகு அரை மணி நேரம் காத்திருங்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு தாராளமாக இரண்டு டம்ளர் அல்லது ஒரு சொம்பு வீதம் குடித்தால் ஜீரணத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாது.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரமும், சாப்பிடும் பொழுதும், சாப்பிட்ட பிறகு அரை மணி நேரமும் முடிந்த வரை தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் அளவு குறைவாகக் குடித்துக் கொள்ளுங்கள்.
பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக வலக்கையில் ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்று சேர்த்து மற்ற மூன்று விரலையும் நீட்டி உள்ளங்கையில் நீர் விட்டு உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்துக்கொண்டு உறிஞ்சிக் குடிப்பது வழக்கம். இதற்கு ஜலபரிஷேஸனம் என்று பெயர். இப்படி உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்காதீர்கள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது என்று நம் முன்னோர் டெக்னிக்கலாக பிரசாரம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக நல்ல பழக்கம் (ஆச்சாரம்) என்று சில பழக்கம் வழக்கங்களை நமக்குக் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எனவே சாப்பிடும் பொழுது ஒரு வேளை தேவைப்பட்டால் இந்த முறையில் மூன்று முறை நீரை உறிஞ்சிக் குடிப்பதன் மூலமாக வயிற்றில் உள்ள அமிலத்தைக் காப்பாற்ற முடியும்.
பிராமணர்கள் மற்றும் ஆச்சாரம் என்ற வார்த்தை பயன்படுத்திய் உடன் இந்த சிகிச்சை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று தயவு செய்து ஒரு முத்திரையைக் குத்திவிடாதீர்கள். இந்தச் சிகிச்சை எந்த மதத்துக்கும் சம்பந்தப்பட்டதல்ல. நோய்களுக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிகிச்சைக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நல்ல பழக்கங்கள் எந்தக் கலாசாரத்திலும் எந்த மதத்திலும் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
எனவே, ஜீரணத்தின் பொழுது, தண்ணீர் எவ்வாறு தடையாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு இனி தண்ணீரின் அளவைக்குறைத்து ஜீரணத்தை அதிகப்படுத்துங்கள்.
நாம் பொதுவாக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஒரு மாத்திரையைக் கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடுங்கள் என்று கூறுவார். சாப்பிடும் பொழுது கவனத்தை சாப்பாட்டில் வையுங்கள் என்றால் நாம் என்ன செய்கிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சாப்பிடும் பொழுது கவனத்தை மாத்திரையின் மீதே வைத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஓடிச் சென்று மாத்திரையை வாயில் போட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கிறோம். இந்த மருந்து மாத்திரைகள் நோயைக் குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால் அந்த மருந்து மாத்திரைக்காக நாம் சாப்பிடும் தண்ணீர் ஜீரணத்தைக் கெடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறது.
எனவே, மருந்து மாத்திரையை முடிந்த வரையில் சாப்பிடாமல் தவிருங்கள். சில நேரங்களில் மருந்து மாத்திரை நமக்குத் தேவைப்படுகிறது. அப்பொழுது சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் பொழுது உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிடாதீர்கள். அரை மணி நேரம் காத்திருந்து பிறகு மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அந்த நீர் ஜீரணத்தைக் கெடுக்காது.
சிலர் “நான் சாப்பிடும் பொழுதுதான் மாத்திரை சாப்பிடுவேன். அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட என்னால் முடியாது. இதற்கு வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்” என்றால் குழம்பு சாப்பாடு சாப்பிடும் பொழுது அதில் மாத்திரையை கலந்து பிணைந்து சாப்பிட்டு விடுங்கள். உங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.
தொடரும்...



உணவை ஜீரணம் செய்வது எப்படி?

நன்றி அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்துப் பொருள்களும் தரமான பொருளாக ரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
1. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.
உணவை இப்படி சாப்பிட வேண்டும்; அப்படி சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிட வேண்டும்; அதைச் சாப்பிட வேண்டும்; இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்லபடியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து “நாங்க ரெடி. உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்குவதற்குத் தயார்” என்று உடல் நம்மிடம் பேசும் பாஷைதான் பசி.
பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக மாறுகிறது. நம் சிகிச்சையில் மிக, மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு. நேரம் நேரத்திற்கு யார் யார் எல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு எல்லாம் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிடுவது என்பதும், நேரம் பார்த்துச் சாப்பிடுவது என்பதும் வேறு வேறு.
உதாரணமாக காலை பத்து மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை. பெரிதாக உடலுக்கு நீங்கள் எந்த உழைப்பும் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். பகல் இரண்டு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம்? இரண்டு மணியாகிவிட்டது சாப்பிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் பசிக்கிறதா என்று யோசித்தோமா என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் ரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது பசி இல்லாமல் நேரம் பார்த்து இரண்டு மணிக்கு பகல் உணவு சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும்.
ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது.
உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் பசி எடுக்காமல் சாப்பிடுவதுதான். இரண்டாவது உதாரணம் காலை பத்து மணிக்கு உணவு சாப்பிடுகிறீர்கள். கடினமாக உழைக்கிறீர்கள். பன்னிரண்டு மணிக்குப் பசி எடுக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். நேரம் நேரத்திற்குத் தான் சாப்பிடுவேன். இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன் என்று காத்திருந்தால் என்ன ஆகும்? வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆஸிட் என்ற அமிலம் பன்னிரண்டு மணிக்குச் சுரந்து விடும். இரண்டு மணி வரை இந்த அமிலத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் நீர்த்துப் போகும். எனவே, பசி எடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிட்ட அந்த உணவு ஒழுங்காக ஜீரணமாகாது. எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நேரம் நேரத்திற்குச் சாப்பிட்டால் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிட்டால் நோய் வராது. வந்த நோயும் குணமாகும்.
ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்று யார் கண்டுபிடித்த சட்டம் இது? சிலருக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளில் ஐந்து முறை கூடச் சாப்பிடலாம். சிலருக்கு உடல் உழைப்பு குறைவாக இருக்கும். அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் போதும். எனவே, இன்று முதல் தயவு செய்து சாப்பிடுவதற்கு நேரம் பார்க்காதீர்கள். நாம் நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது உடல் பசி என்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் உணவைச் சாப்பிடுவதைப் பற்றி யோசித்து அதன் பிறகுதான் சாப்பிடவேண்டும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். யாக்கை என்றால் உடம்பு. எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவையே இல்லை. அருந்தியது அற்றது போற்றி உணின். அதாவது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமான பிறகு மீண்டும் நன்கு பசித்த பின்பு உணவு அருந்தினால் எந்த நோய்க்கும் உடலுக்கும் மருந்து தேவைப்படாது. எனவே, இந்தச் சிகிச்சையில் மிகமுக்கியமான ஒரு விஷயம் பசி எடுத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்காமல் இதற்குப் பிறகு வரும் பல முறைகளைக் கையாள்வதன் மூலமாக உங்களுக்குப் பலன் குறைவாகவே கிடைக்கும்.
ஒரு நாளைக்கு மூன்று முறை மாதத்திற்கு 90 முறை உணவு சாப்பிடுகிறோம். எல்லாராலும் 90 முறையும் பசி எடுத்துச் சாப்பிட முடியாது. எனவே, ஆரம்பத்தில் மாதத்தில் குறைந்தது பத்து முறையாவது பசி எடுத்துச் சாப்பிட்டுப் பழகுங்கள். போகப் போக இருபது முப்பது என்று அதிகப்படுத்தலாம். நம்மில் சிலர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்போம். ஒரு மணிக்கு உணவு இடைவேளை, இரண்டு மணிக்கு வேலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஒரு வேளை அப்பொழுது பசி இல்லையென்றால் என்ன செய்வது என்று கேள்வி வரும். மீண்டும் சொல்கிறேன். சில நேரங்களில் பசி இல்லாமல் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த மாதிரி நேரங்களில் இனி கூறப்போகும் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலமாக உணவு கழிவாகவும், விஷமாகவும் மாறுவதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் நம்மால் முடிந்த இடங்களில் பசிக்காகக் காத்திருப்பது நல்லது. எனவே, தயவு செய்து பசி எடுத்த பிறகு மட்டுமே உணவை உண்ணுங்கள்.
2.உணவில் எச்சில் கலக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே நல்ல பொருளாக ரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு கெட்ட பொருளாக ரத்தத்தில் கலக்கிறது. எச்சிலில் நிறைய நொதிகள் (என்சைம்) உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளைப் பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட ஓர் உணவு மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். எச்சிலால் ஜீரணிக்காத ஓர் உணவு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அது கெட்ட பொருளாகவும், கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இல்லை நாங்கள் எச்சில் கலந்து தான் சாப்பிடுகிறோம் என்று எல்லாரும் சொல்வோம். ஆனால் எச்சில் கலப்பது கிடையாது.
சாப்பிடும் பொழுது உணவை மெல்லும் பொழுது யார் யார் எல்லாம் உதட்டைப் பிரித்து மெல்லுகிறோமோ அவர்களுக்கு எச்சில் கலப்பது கிடையாது. மெல்லும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்பொழுது தான் எச்சில் கலக்கும். உதட்டைப் பிரித்து மெல்லுவதற்கும், உதட்டை மூடி மெல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், சாப்பாட்டை ஒரு பந்து போல கற்பனை செய்யுங்கள். எச்சில் ஒரு பந்து, உதட்டைப் பிரித்துச் சாப்பிடும் பொழுது காற்றுப் பந்து வாய்க்குள் சென்று சாப்பாட்டிற்கும் எச்சிலுக்கும் இடையில் தடையாக இருந்து ஜீரணத்தைக் கெடுக்கிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு காற்று எதிரி. எனவே, தயவு செய்து இனிமேல் எப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், உணவை வாய்க்குள் அனுப்புவதற்கு மட்டும் உதட்டைப் பிரியுங்கள். உணவு வாய்க்குள் நுழைந்த உடன் உதட்டைப் பிரிக்காமல் மென்று விழுங்கும் வரை உதட்டைப் பிரிக்காமல் இருங்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. ஏனென்றால் அந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
சில வெளிநாட்டுக்காரர்கள் நம்மூரில் வந்து சாப்பிடும் பொழுது வேடிக்கை பாருங்கள். அவர்கள் உதட்டைப் பிரிக்காமல் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உதட்டைப் பிரித்துச் சாப்பிடுவதன் மூலமாக இந்த நாடுகளில் அதிகமாக சர்க்கரை நோய் இருக்கிறது. உடனே சில நாடுகள் புத்திசாலி என்றும் சில நாடுகள் முட்டாள்கள் என்றும் தவறாக நினைத்து விடாதீர்கள். சில நாடுகளில் மனரீதியான நோய்களுக்கு அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதட்டை மூடிச் சாப்பிடும் அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்கள் அனைவரும் மனரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டு மனநோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அனைவரும் தினமும் பல மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். சிலநாடுகளில் உடல் ஒழுங்காக இல்லை. ஆனால், மனம் ஒழுங்காக இருக்கிறது. சில நாடுகளில் மனம் ஒழுங்காக இல்லை. ஆனால், உடல் ஒழுங்காக இருக்கிறது. எனவே மருந்து, மாத்திரை கம்பெனிகளுக்கு எல்லா நாட்டிலும் வியாபாரம் திருப்தியாக நடக்கிறது. எனவே, தயவு செய்து இனிமேல் ஒவ்வொரு வாய் உணவையும் உதட்டை மூடி மென்று விழுங்குங்கள்.
உதட்டை மூடிச் சாப்பிடுவதால் நேரம் அதிகமாகும் என்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரம் அதிகமாகாது, குறைவுதான் ஆகும். நீங்கள் ஒரு சப்பாத்தியை வாயில் வைத்து உதட்டைப் பிரித்து 40 முறை மெல்லுங்கள். சப்பாத்தி, சப்பாத்தி போலவே இருக்கும். கூழ் போல ஆகாது. ஆனால் உதட்டை மூடி நான்கு முறை மெல்லுவதால், சப்பாத்தி கூழ் போல மாறிவிடும். விழுங்க வேண்டிய வேலையே இல்லாமல் மைசூர்பா போல வழுக்கிக் கொண்டு உள்ளே செல்லும். உதட்டைப் பிரித்து ரொம்ப நேரம் சாப்பிடுவதை விட உதட்டை மூடி கொஞ்ச நேரத்திலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். எப்பொழுது உதட்டை மூடி மெல்லுகிறோமோ எச்சிலுக்கு ஒரே சந்தோஷம். காற்று என்ற எதிரி இல்லை என்பதால் சீக்கிரமாக உணவில் உள்ள அனைத்து மூலக் கூறுகளையும் பிரித்து அதை நல்லபடியாக ஜீரணம் செய்கிறது.
இந்த முறையில் சாப்பிடும் பொழுது ஒரு சின்ன சிக்கல் ஏற்படும். தாடை ஒரு வாரத்திற்கு நன்றாக வலிக்கும். ஏனென்றால் ஐம்பது வருடங்களாக இல்லாத புதுப் பழக்கம் அல்லவா? அப்படித்தான் வலிக்கும். அந்த வலியைத் தாங்கிக் கொண்டு ஒரு வாரம் பொறுமையாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக இருக்கலாம்.
எனவே, சிகிச்சையில் இரண்டாவது மிக மிக முக்கியமான விஷயம் சாப்பிடும் பொழுது வடை, போண்டா, பொங்கல், ஊத்தப்பம் எது எப்பொழுது யார் சாப்பிட்டாலும் உதட்டை மூடி மென்று விழுங்கும் வரை உதட்டைப் பிரிக்கக் கூடாது.
3.சாப்பிடும் போது கவனம் உணவில் இருக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடன் உணவில் கவனம் வைத்துச் சாப்பிட்டால், அது நன்றாக ஜீரணம் செய்யும். சாப்பிடும் பொழுது கவனத்தைக் குடும்பம், வியாபாரம் போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்துச் சாப்பிடும் பொழுது, சரியாக ஜீரணம் செய்வது கிடையாது. ‘நாம் மூளைக்குத்தானே வேலை கொடுக்கிறோம்? ஜீரணம் வயிற்றில்தானே நடக்கிறது? அது எப்படி பாதிக்கும்? என்ற சந்தேகம் வரும். நம் மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும், வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதைப் பற்றி எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும்.
உதாரணமாக நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம்? உடம்பில் எந்தப் பட்டனை (சுவிட்சை) அழுத்தினால் சிறுநீர் வருகிறது? அதற்கென்று தனியாக ஒரு பட்டனும் கிடையாது. மனத்தால் சிறுநீர் வர வேண்டும் என்று எண்ணியவுடன் வருகிறதல்லவா? எனவே மனம் நினைத்தால் மூத்திரப் பையின் கதவுகளைத் திறக்க முடியும். அதே போல் மனத்தால் நினைத்தால் கதவை அடைக்க முடியும். இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால், மனத்தால் நினைத்தால் நம் உடல் உறுப்புகளை இயக்க முடியும். நோய் முதலில் மனத்தில்தான் தோன்றுகிறது. பின்னர் மனம் தான் உறுப்புகளுக்கு நோயை உண்டாக்குகிறது. அதே போல் நாம் ஆரோக்யமாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே உறுப்புகளுக்கு நோய் குணமாகும்.
உதாரணம்-நாம் தூங்கும் பொழுது கனவு காண்கிறோம். கனவில் ஒரு பாம்பு துரத்துவது போல் காண்கிறோம். கனவில் வேகமாக ஓடுகிறோம். திடீரென கனவு கலைந்து எழுந்து அமர்ந்து பார்க்கும் பொழுது நம் இருதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும். பட படவென இருக்கும். உடல் முழுவதும் வியர்வை வந்திருக்கும். ‘நாம் கனவில்தானே ஓடினோம்? பின்னர் ஏன் வியர்வை வந்தது, நெஞ்சு படபடக்கிறது? ஏனென்றால் கனவில் ஓடுவது போல் மனம் நினைத்துப் பார்க்கும் பொழுது உடலில் ஓடுவதற்கான சக்தியை இழக்கிறோம். அதற்கான சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இந்த 2 உதாரணம் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, உடலிலுள்ள அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் சுரக்கும்.
எனவே, உணவை உண்ணும் பொழுது நம் கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாகச் சுரக்கும். அவ்வாறு இல்லாமல் சாப்பிடும் பொழுது குடும்பம், வியாபாரம், குழந்தை, மனைவி என்று யோசிப்பவர்களுக்கு ஜீரண சுரப்பிகள் சுரக்காததால் தான் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தயவு செய்து இனி சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வையுங்கள்.
ஒரு ஞானியிடம் சென்று சிலர் கேட்டார்கள். “ஐயா! உலகில் நோய்களுக்கான காரணம் என்ன?” என்று, அந்த ஞானி கூறினார் “சாப்பிடும் பொழுது யாரும் சாப்பிடுவதில்லை என்று.” மீண்டும் கேட்டார்கள். “உலகிலுள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்துவது எப்படி?” அதற்கு அந்த ஞானி சொன்னார் “சாப்பிடும் பொழுது சாப்பிட்டால் எல்லா நோயும் குணமாகும்” என்று. இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் உள்ளது. சாப்பிடும் பொழுது சாப்பிட வேண்டும் என்றால் என்ன? சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்கும் எவருக்கும் எந்த நோயும் வருவதில்லை.
எனவே சாப்பிடும் பொழுது உணவுக்கு மரியாதை கொடுத்து இந்த உணவை அளித்த கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லி அவரவர்க்குத் தெரிந்த ஒரு பிரார்த்தனையைச் செய்து உணவுக்கு மரியாதை கொடுத்து சாப்பிட்டால் மட்டுமே நோய்கள் குணமாகும். நம் குடும்ப மருத்துவருக்கு மரியாதை கொடுத்தால் நோய்கள் சற்றுப் பெரிதாகும். எனவே, மருத்துவருக்கு மரியாதை கொடுப்பதை விட்டு விட்டு, சாப்பிடும் சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள்.
உணவு சாப்பிடும் பொழுது, உணவைக் கையில் எடுத்து ‘இந்த உணவு வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி ரத்தமாக மாறி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது’ என்ற எண்ணத்தில் சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.
“பசியின்றி எதையும் உண்ணாதீர்கள்-உண்ணும் பொழுது
உணவைத் தவிர எதையும் எண்ணாதீர்கள்”
எனவே, சாப்பிடும் பொழுது தயவு செய்து கவனத்தை உணவில் வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருக்கலாம்.
நன்றி: அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
தொடரும்...






செவ்வாய், 17 டிசம்பர், 2013

சுவையான சிக்கன் பிரியாணி


தேவையானப் பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
நெய் - 150 கிராம்
பட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் - 500 கிராம்
தக்காளி -500 கிராம்
இஞ்சி - 11/2 ஸ்பூன்
பூண்டு - 11/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா - 11/2 கப்
ப. மிள்காய் - 5
தயிர் - 1கப்
சிகப்பு மிளகாய் தூள் - 11/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன்
தணியா பொடி-1 டீஸ்பூன்
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:

ஓர்பெரியசட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும்

பின் அதில் பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் .போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்.

ப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதிகொமல்லிபுதினாபோட்டுவேகவிடவும்

சிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய்மேல்வரும்போது 1கப் அரிசிக்கு 11/2கப்சூடுநீர்ஊற்றிகொதிக்கவிடவும்

தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்குவடிகட்டவும்

அரிசியை போட்டு நன்கு கிளரவும்

அரிசிபாதிவேகும்வரைதீயை அதிகமாகவைக்கவும்

முக்கால்பகுதிவெந்தவுடன்தீயைசுருக்கவும்பாதி எலுமிச்சைஜீஸ்ஊற்றவும்

சட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்

10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி

சூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்

திங்கள், 2 டிசம்பர், 2013

நோன்பை அறிவுறுத்தும் மதங்கள்

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம்" என்பது சித்தர் பெருமகனார், ஆசான் திருமூலர் வாக்கு. ஆலயமான உடம்பை தூய்மையாக வைத்திருந்தாலே நோயற்ற வாழ வாழ்வு முடியும். தினந்தோறும் வயிறு புடைக்க உண்டு இயந்திரங்களுக்கு வேளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் நம்முன்னோர்கள் ஒருநாள் பட்டினி இருந்து விரதங்களை கடைபிடித்தனர்.

மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு நிறைய உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது.

நோன்பை அறிவுறுத்தும் மதங்கள்

அனைத்து மதக் கோட்பாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.

இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும்.

இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.

விரதத்தின் பலன்கள்

விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

உடல் உறுப்புக்கள் தூய்மை

நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.

நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படுகின்றன.

இளமை பாதுகாக்கப்படும்

வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

மாரடைப்பு தடுக்கப்படும்

வாரம் ஒருநாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

விரத்தை யார் தவிர்க்க வேண்டும்?

நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்க கூடாது. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

விரத நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்