சனி, 24 டிசம்பர், 2011


ரெளடிகளை மட்டுமல்ல

ரெளடி மரங்களையும் ஒழிக்க வேண்டும்

'மனிதரிலும் பறவை உண்டு
விலங்கும் உண்டு, கல் உண்டு
மரமும் உண்டு

மனிதரிலும் நீர் வாழும்
சாதி உண்டு அனேக குல
மனிதர் உண்டு

மனிதரிலும் மனிதர் உண்டு
வானவரும் மனிதர் போல்
வருவதுண்டு

மனிதரிலும் பிறப்பறுக்க
வந்ததுவே அருமையென
வகுத்தார் முன்னோர்' என்கிறது 'சிவானந்த போதம்'.

மனிதர்களில் தெய்வாம்சம் உள்ள ஞானிகள், அறிஞர்கள், பொதுத்தொண்டர்கள், பண்பாளர்கள் என பல வகையினர் உண்டு.
பாட்டாளிகள் பாமரர்கள், அப்பாவிகள் கூட்டமும் உண்டு.

அதே போல் பலவீனமானவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை சுரண்டி வாழும் ரெளடிகள் கூட்டமும் உண்டு.
நல்லவர்களின் எண்ணிக்கையை வைத்துதான் ஒரு நாட்டிற்க்கு மதிப்பே தவிர ரெளடிகளின் எண்ணிக்கையை வைத்து அல்ல.

ஞானிகள், அறிஞர்களை மதிக்காத நாட்டில் அவர்கள் தோன்ற மாட்டார்கள். பின் அந்த நாட்டிற்கு அழிவைத்தவிர ஆக்கம் வர வாய்ப்பேயில்லை. தமிழகத்தின் இன்றைய நிலைமைகூட இதுதான்.
மனிதர்களைப் போலவே மரங்களிலும் தெய்வாம்சம் மிக்க ஞான மரங்கள், மருந்து மரங்கள், பழ மரங்கள், பயன் மரங்கள் எனப் பலவகை உண்டு.
அரச மரம், அத்தி மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், நாவல் மரம் போன்றவை தெய்வாம்சம் மிக்க மரங்களின் பட்டியலில் உள்ளவை.
அதே போல மரங்களிலும் தீமை மட்டுமே செய்து வாழும் ரெளடி மரங்கள் உண்டு. அத்தகைய மரங்களை ஒழித்தே ஆக வேண்டும்.
நல்லவர்களின் எண்ணிக்கை வைத்தே ஒரு நாட்டிற்கோ, ஒரு நகரின் பகுதிக்கோ, நல்ல பெயரோ கெட்ட பெயரோ கிடைக்கிறது.
அதே போல் நல்ல மரங்களின் எண்ணிக்கை வைத்தே ஒரு நாட்டிற்கு மழை வளமோ, உயிர் வளிப்(Oxygen) பெருக்கமோ, நோயற்ற சூழ்நிலையோ அமைகிறது.
ரெளடிகள் வாழும் பகுதியில் எப்போதும் அடிதடி, சண்டை, குத்து, வெட்டு என்று அமைதியின்மை இருக்கும். அதே போன்று நல்ல மரங்கள் இல்லாத பகுதியில் வறட்சி, வறுமை, நோய் நொடிகள் போன்ற அவல நிலைகள் இருக்கும்.
எனவே ஒரு நாடு உருப்பட வேண்டுமென்றால் ரெளடிகளின் ஆதிக்கம் வளர்வதைத் தடுக்க வேண்டும். அதேபோல் ரெளடி மரங்களாகிய நச்சு மரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அவற்றை அடியோடு அழிக்க வேண்டும்.
அப்படி அழிக்கப்பட வேண்டிய நச்சு மரம் பற்றி எச்சரிப்பதே இந்தக் கட்டுரை.தமிழகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் அந்த ரெளடி மரத்திற்கு வேலிக்காத்தான், சீமைக்கருவேலமரம் என்று பல பெயர்கள் உண்டு.
1998-ல் அமெரிக்காவில் பயணம் செய்த காலத்தில் தாவரவியல் பூங்கா ஒன்றைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. உலகில் உள்ள அனைத்து மரங்களையும் வளர்த்து, அந்தந்த மரங்களைப் பற்றிய குறிப்புகளை அவற்றின் அடியில் அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள்.
அந்த தாவர வரிசையில் தற்செயலாய் இந்த வேலிக்காத்தான் என்ற மரத்தைப் பார்க்க நேர்ந்தது. நம் நாடு முழுக்க இந்த மரம் மண்டிக் கிடக்கிறது.ஒரு வேளை இந்த மரத்தினால் பெரிய பயன்கள் ஏதும் இருந்தால் நம் நாட்டிற்குச் சொல்லலாமே என்று கருதி, பேப்பர் - பேனா சகிதமாகப் போய் அந்த மரத்தை பற்றிய குறிப்புகளை வாசிக்க தொடங்கினேன். முதற்குறிப்பை படித்ததுமே அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டேன். அந்தக் குறிப்புகளை அப்படியே தருகிறேன்.

உங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறதா, இல்லையா பாருங்கள்.

• வளர்க்க கூடாத நச்சு மரங்களின் பட்டியலில் முதல் இடத்தை வகிப்பது இந்த முள்மரமே.

• எந்த வறட்சியிலும் இந்த மரம் வாடாது. காரணம், நிலத்தடியில் நீர் இல்லையெனில், காற்று மண்டலத்தில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சி வாழும் சக்தி இந்த மரத்திற்கு உண்டு.

• காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், இந்த மரம் வளர்ந்துள்ள பகுதிகள் பெரும்பாலும் வறட்சியாகவே இருக்கும். எனவெ அந்த பகுதிகளிள் மழை பெய்யும் அளவு குறையும்.

• தான் வளர்ந்துள்ள நிலத்தை வேறு ஏதும் விளையாத களர்நிலமாக இந்த மரம் மாற்றிவிடும்.இந்த மரம் வளார்ந்துள்ள பகுதிகளிள் உள்ல நிலத்தடி நீர், குடிக்க பயன்படாத நச்சு நீராக மாறிவிடும்.

• இந்த மரத்தின் இலை, காய். விதை போன்றவை எந்த ஓர் உயிரினத்த்ற்கும் உணவாகவோ, வேறு வகையிலோ பயன்படாது.
• இந்த மரத்தின் முள் குத்தினால் அந்த புண் புரை யோடி, நாகப் பாம்பின் நஞ்சைப் போல கொடிய விளைவை ஏற்படுத்தும்.
• இந்த மரத்தின் கீழ் கால்நடைகளைக் கட்டிவைத்தால், அந்தக் கால்நடைகள் விரைவில் மலடாக மாறிவிடும். மீறிக் குட்டி போட்டாலும் உடற்குறையுள்ள குட்டிகளை குட்டிகளையே போடும்.
• இந்த மரத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயிர்வளி மிக மிகக் குறைவு. கரியமல வாயுவோ மிகமிக அதிகம்.
இவைதான் அந்த குறிப்புகள்.
‘வெட்டவெளியில் நின்றாலும் பரவாயில்லை. வேலிக்காத்தானுக்கு அடியில் நிற்காதே !’ என்று கொங்குப் பகுதியில் ஒரு பழமொழியே உண்டு.
கிழக்கு இராமனாதபுரம் பகுதி உருப்படாமல் போவதற்குக் காரணமே அங்கே மண்டிக்கிடக்கும் இந்த வேலிக்காத்தான் மரங்கள்தான்.
ஆலமரம், அரசமரத்தைப் பார்த்தால் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பல்வேறு பறவைகள் அந்த மரங்களில் கூடு கட்டி, ஆடிப் பாடி 'கிறீச்'சிடும் ஒலியை கேட்கக்கேட்க, நெஞ்சில் அன்பும் கருணையும் பொங்கும்.
அதே வேளையில் இந்த வேலிக்காத்தான் முள் மரத்தடியில் நின்று பாருங்கள். மனத்தில் என்ன உணர்ச்சி தோன்றுகிறது? எந்த பறவையாவது இந்த முள் மரத்தில் கூடுகட்டிக் கொண்டாடுவதைப் பார்க்கமுடியுமா?
தகவல்: கவனகர் முழக்கம்

மரங்களை வெட்டுங்கள்





உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 

மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது.  (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! ) 

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!  
thanks;kousalya